தமிழக செய்திகள்

மங்கலம் அருகே சுவர் விழுந்து தொழிலாளி சாவு

பலத்த காயமடைந்த அருண்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மங்கலம்,

மங்கலத்தை அடுத்த புக்குளிபாளையம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 23) என்பவர் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலையில் பழைய கட்டிடத்தை இடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது.

இதில் அருண்குமார் பலத்த காயமடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அருண்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அருண்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.