விழுப்புரம்,
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 65), கூலித்தொழிலாளி. கடந்த 7.11.2020 அன்று 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயதுடைய சிறுமி, அச்சரம்பட்டு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த செல்வம், அந்த சிறுமியிடம் சென்று சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அந்த சிறுமியை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.