கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன்

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில், தேர்வர்கள், தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் 369 பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில், அம்மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்து, எழுத்துத் தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேர்வாணையம் முழுவீச்சில் தயாராகி வருவது கண்டனத்திற்குரியது.

அரசுப் பணிக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து