சேலம்,
சேலம் அயோத்தியாப்பட்டணம் மெயின் ரோட்டில் ரெயில் பெட்டி உணவகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தை நேற்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பன்னாலால் திறந்து வைத்தார். ரெயில் பெட்டிக்குள் அமர்ந்து உணவு சாப்பிடும் வித்தியாசமான அனுபவத்தை இந்த உணவகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
அயோத்தியாப்பட்டணத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ரெயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயின் கட்டணமில்லா வருவாய் கொள்கையின் கீழ் இந்த உணவகம் நடத்துவதற்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய ரெயில் பெட்டி ஒன்று ஒப்பந்ததாரர் மூலம் புதுப்பிக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு விற்பனை செய்யும் வகையில் தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஒப்பந்த காலமான 5 ஆண்டுகளில் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.46 லட்சத்து 20 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நிகழ்ச்சியில் சேலம் கோட்ட கூடுதல் ரெயில்வே மேலாளர் சரவணன், கோட்ட வணிக மேலாளர் மல்லிகா, முதுநிலை கோட்ட மின் பொறியாளர் (பொது) பல்ராம்குமார். கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் பாண்டே மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.