தமிழக செய்திகள்

குளிர் சாதன பெட்டியில் தண்ணீர் எடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி,

ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன் (24). இவரது மனைவி கனகலட்சுமி (29). கனகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற நிலையில், 13 வயதில் ஒரு மகள் உள்ளார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

தண்ணீர் எடுக்க முயன்றபோது..

இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கனகலட்சுமி, திருமுருகனை திருமணம் செய்து கொண்டு தனது மகள் காவியாவுடன் ஆண்டிப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து தண்ணீர் எடுக்க திருமுருகன் சென்றுள்ளார். அப்போது குளிர்சாதன பெட்டியில் கையை வைத்தபோது திடீரென மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சத்தமிட்ட நிலையில், பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த கனகலட்சுமி ஓடி வந்து பார்த்துள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அப்போது திருமுருகன் மின்சாரம் தாக்கி கீழே குனிந்த நிலையில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கனகலட்சுமி வீட்டின் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் திருமுருகனை மீட்டு ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே திருமுருகன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே திருமுருகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.