ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வசந்தவேல் 
தமிழக செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் இளைஞரை சவுக்கு தோப்புக்குள் தூக்கிச் சென்று தாக்கி நகை, பணம் கொள்ளை

வசந்தவேல் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வேலை முடிந்து தனியாக வீட்டிற்கு திரும்பிய இளைஞரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து, சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு தோப்புக்குள் அரங்கேறிய கொடூரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் வசந்தவேல். இவர், இன்று (புதன்கிழமை) தனது வேலைகளை முடித்து விட்டு தனியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் நைனாகுப்பம் மற்றும் மத்தியனூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வசந்தவேலை வழிமறித்தனர்.

இதையடுத்து அவரை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். பின்னர், வசந்தவேல் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்தனர். மேலும், அவரது செல்போனை பறித்த கொள்ளையர்கள், அதிலிருந்த கூகுள் பே ஆப் மூலம் ரூ. 28,000 பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

கொள்ளையர்களின் கடுமையான தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தவேல், சத்தம் போட்டு அலறினார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து பொதுமக்கள் வசந்தவேலை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் தீவிர விசாரணை

இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி அசோகன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட வசந்தவேலிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஷஹ்னாஸ் இன்று காலை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பட்டப்பகலில் இளைஞரைத் தாக்கி, ஆன்லைன் மூலமாக பணத்தைப் பறித்து சென்ற இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT