தமிழக செய்திகள்

மாணவிகளுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ்.. வாலிபர் மீது பாய்ந்த போக்சோ

மாணவிகளிடம் இருந்து அவசர தேவைக்கு பணம் வேண்டும் எனக் கூறி நகைகளை வாங்கி, அதனை விற்று பணமாக பெற்றுள்ளார்.

களியக்காவிளை,

காதல் வலைவீசி மாணவிகளிடம் பறித்த நகைகளை விற்று ஆடம்பரமாக வலம் வந்த வாலிபரிடம் இருந்து ஆம்னி பஸ், 2 கார்களை பறிமுதல் செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

மாணவிகளை ஏமாற்றிய வாலிபர்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாகோடு பாளையங்கட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ் (வயது 25), சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.

இந்தநிலையில் ஜெனிஷ் மீது பிளஸ்-2 மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில், தன்னை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி தன்னிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளை பறித்ததுடன், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து மிரட்டுவதாக கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

ஆம்னி பஸ், கார்கள் பறிமுதல்

பின்னர் விசாரணை நடத்தியதில், மேலும் ஒரு கல்லூரி மாணவி மற்றும் திருமணமான வசதி படைத்த 3 பெண்களையும் குறி வைத்த ஜெனிஷ், இனிக்க, இனிக்க பேசி தன்னுடைய வலையில் வீழ்த்தியது அம்பலமானது.

மேலும் அவர்களிடம் இருந்து அவசர தேவைக்கு பணம் வேண்டும் எனக் கூறி நகைகளை வாங்கி, அதனை விற்று பணமாக பெற்றுள்ளார். பிறகு அந்த பணம் மூலம் ஆம்னி பஸ், 2 சொகுசு கார்களையும் வாங்கி ஆடம்பரமாக வலம் வந்துள்ளார். இந்த வாகனங்களை வாடகைக்கு விட்டும் அவர் பணம் சம்பாதித்ததாக தெரிகிறது.

திருமணமான பெண்கள்

மாணவிகளிடம் மட்டும் வாலிபர் 66 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இதுபோக திருமணமான பெண்கள் அவரிடம் கொடுத்து ஏமாந்த நகைகள் எவ்வளவு என்ற விவரத்தையும் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள்

மேலும் தான் நடத்தி வந்த சவுண்ட் சர்வீசுக்கு தேவையான ஜெனரேட்டர்கள் மற்றும் அதிநவீன ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் வாங்கி உள்ளார் என்பதையும் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து ஆம்னி பஸ், கார்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதவிர ஜெனிஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என விசாரணை நடந்து வருகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம். அவர்களுடைய பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.