சென்னை,
காதல் போட்டியில் வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரில் வசிப்பவர் நந்தகோபால் (வயது 23). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை, கடந்த 7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக தெரிகிறது.
அதே இளம்பெண்ணை சதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாக நந்தகோபால், தனது காதலியை செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர் பேசவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், தனது காதலியிடம் பேச முடியாதது குறித்து நந்தகோபால், சதீஷிடம் விசாரித்தார். அப்போது அவர், "நான் காதலிக்கும் பெண்ணை நீயும் காதலிப்பதா?" என்று கேட்டு நந்தகோபாலுடன் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் நந்தகோபாலை, 'காதலியை பார்க்க வாருங்கள்' என்று தனியாக அழைத்துச் சென்ற சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார். இதில் நந்தகோபால் அரிவாளால் வெட்டப்பட்டார். மேலும், கற்களை வீசியும் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நந்தகோபால், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சதீஷ் உள்பட 8 பேரை கைது செய்தனர்.