தமிழக செய்திகள்

3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் வாலிபர் ஒருவர், இதுவரை 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். இதில் முதல் 2 மனைவிகள் 5 ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிரிந்து சென்றுவிட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவிற்கு உட்பட்ட சன்னதுபுதூர் கீழூர் காலனி தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 32). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் மது போதையில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவருக்கு சற்று மனநலம் பாதித்தது போன்ற பாதிப்புகளும் இருந்து வந்துள்ளன.

சுரேஷ்குமார் இதுவரை 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். இதில் முதல் 2 மனைவிகள் 5 ஆண்டுகளுக்கு முன்பே இவரைப் பிரிந்து சென்றுவிட்டனர். தற்போது 3-வது மனைவியுடன் வசித்து வந்த சுரேஷ்குமாருக்கு, பிரிந்து சென்ற முதல் மனைவி மூலம் 11 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மற்ற 2 மனைவிகளுக்கும் குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த சுரேஷ்குமார், இரவு தூங்கச் சென்றார். அவர், தனது அறையை உள்புறமாக பூட்டிக்கொண்டு சீலிங் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலையில் வீட்டார் பார்த்தபோதுதான் அவர் தற்கொலை செய்துகொண்ட விபரம் தெரியவந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்த கயத்தாறு போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் கொள்ளஆசாரி தெருவை சேர்ந்த தர்மர் மகன் பாரதி(42), என்பவருக்கு தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாரதி கடந்த 3 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பாரதி அதிக குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது தந்தையிடம் தான் சாகப்போவதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை சத்தம் போட்டு கண்டித்துள்ளனர். பின்னர் அவர் தனது அறைக்குள் தூங்கச் சென்றுள்ளார்.

இன்று காலை பாரதியின் தந்தை அறைக்கு சென்று பார்த்தபோது, பாரதி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.