கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த 3 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

திருமணமானது முதல் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்ப சமுத்திரத்தை சேர்ந்தவர் தேவ ஜெசிப்பிரியா (22 வயது). இவர் கல்லூரியில் படிக்கும்போது, விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியை சேர்ந்த வசந்தராஜ் (25 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். கணவன் - மனைவி இடையே திருமணமானது முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை - பணம் விவகாரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேவ ஜெசிப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்தராஜ் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக தேவஜெசிப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே தேவஜெசிப்பிரியா இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 3 மாதத்தில் தேவஜெசிப்பிரியா இறந்ததால், அவரது சாவுக்கான காரணம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்த தேவ ஜெசிப்பிரியாவின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்தனர். தேவ ஜெசிப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவு வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தியும் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also read:இந்தியா ஒரு பாலைவன சோலை

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த கடலூர் புதுநகர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.