தமிழக செய்திகள்

காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கடலூரைச் சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில், அப்பெண் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

சென்னை,

காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்த விரக்தியில் சென்னை புரசைவாக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண் தற்கொலை

கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுகாஷினி (வயது 28). இவர், சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். புரசைவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தான் தங்கி இருந்த வீட்டின் மின்விசிறியில் சுகாஷினி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று. சுகாஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

மேலும் சுகாஷினி தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், 2023-ம் ஆண்டு முதல் புரசைவாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறேன். பெரியமேட்டைச் சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்

பெற்றோருக்கு தெரியாமல் அவருடன் வாடகை வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தேன். இதற்கிடையில் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். இதனால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் அவரது காதலனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.