தமிழக செய்திகள்

மதுரையில் குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம்பெண்: சிறுமி பலி

மதுரையில் கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறு காரணமாக ஒரு இளம்பெண் தனது 2 மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு அதை தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் மகேசுவரன். இவருடைய மனைவி ஷாலினி (வயது 32). இவர்களுைடய மகள்கள் மோகனஸ்ரீ(6), விஜயஸ்ரீ(4).

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஷாலினி தனது 2 மகள்களுக்கும் எலி மருந்தை (விஷம்) கொடுத்துவிட்டு அதனை கரைத்து தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மோகனஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். மேலும் ஷாலினி, அவரது மற்றொரு மகள் விஜயஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.