ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த ஆனந்தபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி கோசலை (வயது 45). 2 பேரும் தேங்காய் வியாபாரிகள். இவர்களுடைய மகள் திவ்யா (23). இவர் அதே பகுதியை சேர்ந்த கதிர் வேல் (27) என்ற வாலிபரை 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் இரவு திவ்யாவை அழைத்து செல்ல கதிர்வேல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது காதலனுடன் செல்வதற்கு திவ்யா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
இதை கவனித்த கோசலை, மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரி கிறது. மேலும் காதலுடன் செல்லக்கூடாது என்று திவ்யாவை கோசலை எச்சரித்துள்ளார். ஆனால் அதையும் மீறி திவ்யா காதலனுடன் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கோசலை வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோசலை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னுடைய பேச்சை மீறி காதலனுடன் மகள் வீட்டை விட்டு வெளியேறியதால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.