தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ் (24 வயது). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் மகள் மதுமிதா (21 வயது) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிறந்து 54 நாட்களேயான அஜித்குமார் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், கடந்த 1 மாதமாக மதுமிதா கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் தொடர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்று வலி குறையாததால் மன உளைச்சலில் இருந்த மதுமிதா, சம்பவத்தன்று காலையில் வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மதுமிதாவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த மதுமிதாவிற்குத் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால், தூத்துக்குடி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
பிறந்து 54 நாட்களே ஆன ஆண் குழந்தை தாயின்றி தவித்து வருவது பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.