தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சி ரெட்டியாபட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னர். இவரது மனைவி ஷாலினி (24 வயது). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பொன்னர் திருச்சி பால் பண்ணை பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஷாலினி மாமியார் வெள்ளையம்மாளுடன் வசித்து வந்தார். பொன்னர் அவ்வப்போது ரெட்டியாபட்டி வந்து ஷாலினியை பார்த்து விட்டு செல்வார்.

இந்த நிலையில் நேற்று ஷாலினி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியே சென்று இருந்த வெள்ளையம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மருமகள் ஷாலினி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஷாலினியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் முசிறி கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.