தமிழக செய்திகள்

சாத்தான்குளத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: வாலிபர் கைது

நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்து, சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றபோது ஒரு வாலிபர் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரசு பேருந்து

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்தை, கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்தின் நடத்துநராக ஜெயகோபி என்பவர் பணியில் இருந்துள்ளார். இப்பேருந்து சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்றபோது, சாத்தான்குளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை (வயது 31) என்பவர் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

இது தொடர்பாக ஓட்டுநருக்கும், சின்னத்துரைக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சின்னத்துரை, அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் ரவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஓட்டுநர் ரவி, சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநரைத் தாக்கிய சின்னத்துரையை கைது செய்தார்.