சுமன் ராஜ் 
தமிழக செய்திகள்

கும்பகோணம்: பேருந்து நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு

தனியார் பள்ளியில் பணிபுரியும் பெண் ஒருவரை சுமன் ராஜ் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கும்பகோணம்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கண் முன்னே வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமன் ராஜ் ஒரு தலை காதல்

கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சுமன் ராஜ் (வயது 28). இவர் அங்கு உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் பெண் ஒருவரை சுமன் ராஜ் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் இவருடைய காதலை ஏற்க மறுத்ததோடு, தனக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மக்களை உலுக்கிய அலறல் சத்தம்

இதனால் கடும் மனமுடைந்த சுமன் ராஜ், இன்று காலை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த எரிபொருளை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். உடல் கருகி அவர் அலறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து நிலைய பொதுமக்களும், அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசாரும் ஓடிவந்து தீயை அணைத்து அவரை மீட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பலத்த தீக்காயமடைந்த சுமன் ராஜ், உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொது இடத்தில் அரங்கேறிய இந்த தற்கொலை முயற்சி குறித்து கும்பகோணம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதல் விவகாரம் மற்றும் பொது பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.