திருச்சி,
திருச்சி பருப்புக்காரத் தெரு, ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ பிரபாகரனின் மகன் அந்தோணி (22), வேலை தேடி வந்த நிலையில், ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, வேலைவாய்ப்பு நிறுவனம் எனக் கூறி இ-மெயில் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவரது புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளனர். பின்னர் வேலை தயாராகிவிட்டதாகக் கூறி, அவர் வழங்கிய ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதன்பின், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் பணம் செலுத்த வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்தோணி, அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 980-ஐ அனுப்பியுள்ளார்.
பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.