தமிழக செய்திகள்

காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு அண்டுருட்டி விளை பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் ஜெனிஷ் பிரதீப் (27 வயது), கொத்தனார். இவர் கடந்த 10 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது காதலியை மணமுடிக்க ஜெனிஷ் பிரதீப் முடிவெடுத்தார். இதற்காக காதலியின் சம்மதத்தை பெறும் முயற்சியில் இறங்கினார். ஆனால் காதலன், காதலி இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக காதலி, ஜெனிஷ் பிரதீப்பிடம் பேசவில்லையாம். அவர் எவ்வளவோ பேச முயன்றும் காதலி தவிர்த்துள்ளார். இதனால் காதலனுக்கு மனக்குழப்பம் அதிகரித்து, வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலைக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் ஜெனிஷ் பிரதீப் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே வெளியே சென்ற அவரது தாயார் வீட்டுக்கு வந்த நிலையில், மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி துடித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேச மறுத்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.