தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (வயது 24). இவர் கடந்த 17-ம் தேதி நாகலாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்றுள்ளார். பைக்கை ரஞ்சித்குமார் என்பவர் ஓட்ட, மேகவர்ணராஜா, முத்துக்குமார் ஆகிய 2 பேரும் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளனர். எப்போதும் வென்றான் பாலத்தின் அருகே வடக்கிலிருந்து தெற்காக சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் வாகனத்தில் பயணித்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ரஞ்சித்குமார், மேகவர்ணராஜா ஆகிய 2 பேரும் உள்நோயாளிகளாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.