தமிழக செய்திகள்

லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

தூத்துக்குடி இனிகோநகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி இனிகோநகரைச் சேர்ந்த பிச்சையா மகன் டிராவின் (வயது 25), கடல் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

முத்தையாபுரம் வடக்குத் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது டிராவினின் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிராவினின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.