தமிழக செய்திகள்

வியாசர்பாடி சித்தர் பீடத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் உள்ள சித்தர் பீட வளாகத்துக்குள் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சென்னை,

சென்னை வியாசர்பாடியில் உள்ள சித்தர் பீடத்தில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாலிபர் வெட்டிக்கொலை

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் உள்ளது. இந்த சித்தர் பீடத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இந்த சித்தர் பீட வளாகத்துக்குள் நேற்று காலை வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது.

சித்தர் பீடத்துக்கு வந்த பக்தர்கள், வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி போலீசார், கொலையான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதமா?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த நரேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரது கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சித்தர் பீட வளாகத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.