செங்கல்பட்டு,
பழிக்கு பழியாக வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (வயது 26). இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வீரமுத்துகிருஷ்ணனை வழிமறித்து கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக நிதிஷ்குமார் (20), ஹரிஷ் (18), சூர்யா (20), ஜெயபால் (20), பரத் (22), சூர்யா (19) ஆகிய 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீரமுத்து கிருஷ்ணன் என்பவர் சிங்கபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரை வெட்டிக் கொலை செய்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே தற்போது இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.