முத்துராஜா 
தமிழக செய்திகள்

களக்காடு அருகே முன் விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை - ஒருவர் கைது

சம்பவத்தன்று இரவு, ரமேஷ் ராமை முத்துராஜா என்பவர் போன் செய்து வரவழைத்துள்ளார்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விரைந்து செயல்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.

முன்விரோதம்

நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் ராம் (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

சம்பவத்தன்று இரவு, ரமேஷ் ராமை முத்துராஜா என்பவர் போன் செய்து வரவழைத்துள்ளார். இதையடுத்து ரமேஷ் ராம் தனது உறவினர்கள் இருவருடன் கீழதேவநல்லூர் மணிமுத்தாறு கால்வாய் கரைக்கு சென்றுள்ளார். அங்கு இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், ரமேஷ் ராமை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் களக்காடு காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஒருவர் கைது

கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே களக்காடு போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக தற்போது ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT