சென்னை,
சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழந்திருப்பதாக தகவல வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இதற்கிடையில், சட்டசபை விடுமுறையின் காரணமாக தொகுதிக்கு ஜெகதீஸ்வரி சென்றிருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் வந்த நிலையில் அவருக்கு முன்னால் எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமும், கடைசியாக அவரின் சொந்த வாகனமும் வந்திருக்கிறது.
இதில் மூன்றாவதாக வந்த அவரது சொந்த கார் சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளைஞரின் பெயர் இறையன்பு என்றும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனத்தை பறிமுதல் செய்திருப்பதாகவும் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.