திருநெல்வேலி,
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கீழமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் விஜய் (வயது 20) என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், விஜய் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை கருதி, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 44 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.