நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்தி மேடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சதீஷ் (18 வயது). மேளக்கலைஞரான இவர் அவ்வப்போது கட்டிட வேலைக்கும் சென்று வந்தார்.
சம்பவத்தன்று இவர் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் உள்ள குளியலறையில் 17 வயது சிறுமி குளித்துக்கொண்டிருந்தார். இதனை கவனித்த சதீஷ், வீட்டின் பின்பக்கமாக சென்று குளியலறையில் சிறுமி குளிப்பதை எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால் சதீஷ் அங்கிருந்து ஓடிவிட்டாராம். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் உடனே தங்களின் உறவினர்களுடன் சதீஷ் வீட்டுக்கு சென்று அவரது தந்தை ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜூ, சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். அதேபோல் சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக சதீஷ் மீது அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனியாக புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.