சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காரும், டிரைவர் படிகளாக மாதந்தோறும் ரூ.75,000 மற்றும் உதவியாளர் படிகளாக ரூ. 25,000 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏக்களுக்கு இதுபோன்ற ஆடம்பர வசதிகளைச் செய்து தருவதற்காகவா நமது வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும்? லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற மிகவும் ஏழை எளியவர்கள் உட்பட அனைவருக்குமா? என்று நடிகை கஸ்தூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 12-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார். அப்போது அவர், நான் 280 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இங்கு வருகிறேன். அதற்கு பயணப்படி கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. வாடகைக்குதான் எடுக்க வேண்டியதுள்ளது. எனது தொகுதியில் 40 கிலோமீட்டர் சுற்றளவு பயணித்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்வதற்கான வாகன வசதிகள் இல்லை. ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு. அவருக்கு ஊதியம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வசதிகள் இல்லை. இப்படித்தான் இங்குள்ள எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கார் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என பேசினார். இதை ஏற்றுக்கொண்ட முதல் அமைச்சர் விஜய், எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வைத்துக்கொள்ள வாகனப்படி மற்றும் உதவியாளர் படி என மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏக்கள் வரவேற்பு தெரிவித்த போதிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களில் விமர்சனம் கிளம்பியுள்ளது.
அரசின் அறிவிப்புக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:”ஓட்டுநருடன் கூடிய கார்கள், மாதம் ரூ. 75,000 ஓட்டுநர்படி மற்றும் ரூ. 25,000 உதவியாளர்படி ஆகியவற்றை அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற 'மிகவும் ஏழை' உறுப்பினர்களுக்கு ஆடம்பர வசதிகளைச் செய்து தர நமது வரிப்பணம் வீணடிக்கப்படப் போகிறதா?நினைவில் கொள்ளுங்கள், இந்த ஏழை மனிதர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,05,000, சட்டசபை வரும் நாள்களுக்கு ரூ. 500-ம் பெறுகிறார்க என்ன அபத்தம் இது? பெரும்பான்மையான மக்களைப் போலவே சட்டசபை உறுப்பினர்களும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும், சாமானிய மனிதனைப் போல நடந்து செல்லட்டும்.
இந்த '5-ஸ்டார்' பாணி நிர்வாகத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தொழிலதிபர்கள் அம்பானி அல்லது அதானியின் டிரைவருக்கு கூட அதிகபட்சம் ரூ. 30,000 தான் சம்பளம் இருக்கும். எம்.எல்.ஏக்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதில்லை, இலவச தங்குமிடம் மற்றும் இலவச ரயில் பயண வசதிகளுக்கும் தகுதியுடையவர்கள்.அதிர்ச்சியளிக்கும் இந்தச் செலவுத் திட்டத்தை உடனடியாக விஜய் ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.