தமிழக செய்திகள்

சட்டசபை முட்டுக்காடுக்கு மாறுகிறதா? பரபரப்பு தகவல்

ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய மாபெரும் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் (2006-11) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சட்டசபை கட்டிடத்தை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியாக மாற்றினார். தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் சட்டசபை செயல்பட்டு வருகிறது.

கோட்டை வளாகத்தின் நெரிசலைக் குறைக்கவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித போக்குவரத்துப் பாதிப்பும் இன்றி எளிதாக வந்து செல்லவும் சட்டசபையை முட்டுக்காட்டில் கட்டப்படும் வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.535 கோடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மையத்தில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய மாபெரும் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.