தமிழக செய்திகள்

சாதி, மதமற்றவர்; இயக்குநர் பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு

ஒருவாரத்திற்குள் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

நடிகர் பார்த்திபன், சென்னை சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் கடந்த மார்ச் 20, 2026 அன்று சாதி இல்லை, மதம் இல்லை சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், தனது விண்ணப்பத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தான் 1958-ல் பிறந்ததாகவும், பெற்றோர் பிறப்பைப் பதிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பழைய எஸ்.எஸ்.எல்.சி முறையில் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பள்ளிச் சான்றிதழ்களைப் பெறாமலேயே படிப்பை நிறுத்தியதால், தன்னிடம் சாதி அல்லது மதத்தைக் குறிக்கும் எந்தவொரு ஆவணமும் தற்போது கைவசம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், பார்த்திபனுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஒருவாரத்தில் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் “உஸ்தாத் பகத் சிங்” என்ற தெலுங்கு பட விளம்பரத்தின் போது, பார்த்திபன் தன்னை “நாயுடு பையன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

SCROLL FOR NEXT