தமிழக செய்திகள்

தமிழகம் மட்டுமா கடன் வாங்குகிறது? ப.சிதம்பரம் கேள்வி

தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை. 'இலவசம்' என்பதை நான் மறுக்கிறேன் என்று ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளியில் முதல் ஆளாக ஓட்டு போட்ட பிறகு முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ஒரு நிலையான அரசு வேண்டும். வளர்ச்சி வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் வேண்டும். இந்த 3 எதிர்பார்ப்புகள்தான் எதிரொலிக்கின்றன. இந்த மூன்றையும் அளித்த தி.மு.க. அரசு மீண்டும் அமையும். இன்னும் 5 ஆண்டுகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரக்கூடிய அரசுக்கு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. வரவு-செலவு கணக்கை போடும்போது சொந்த வருவாய், மத்திய அரசின் வருவாய் இரண்டையும் கணக்கில் எடுத்துத் தேவையான வரவு-செலவு கணக்கு போட வேண்டும். இது மத்திய, மாநில அரசுக்கும் பொருந்தும்.

நிலையான அரசு, வலிமையான அரசு உறுதியாக வரவு-செலவு அளிக்கும். கடன் வாங்குவதில் தப்பில்லை, எல்லா நாடுகளும் கடன் வாங்குகின்றன. தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை. 'இலவசம்' என்பதை நான் மறுக்கிறேன். உலகளாவிய அடிப்படை வருமானம், தமிழகம் முழுவதும் அடிப்படை வருமானம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று தருகிறார்கள். குறைந்தபட்ச வருமானம் எல்லோருக்கும் வருகிறது என்று பார்க்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.