தமிழக செய்திகள்

புதிய சட்டசபை பேரவை செயலாளராக பொறுப்பேற்றார் சாந்தி

தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர் என்ற வரலாற்று சிறப்புமிக்க அங்கீகாரத்தை பெற்றார்.

சென்னை,

தமிழக சட்டசபை செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவிக்காலம் செப்டம்பர் 30 வரை முடிவடைய இருந்த நிலையில் முன்கூட்டியே பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன் பதவியைவிட்டு விலகுவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அவர் கடிதத்தைச் சமர்பித்துள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி நியமிக்கப்பட்டார்.

1989-ல் சட்டமன்றத்தில் சேர்ந்த சீனிவாசன், 2018-ல் சட்டமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 2023-ல் அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு மூன்றாண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, மறுநியமனம் செய்யப்பட்டார்.

சட்டமன்றச் செயலகத்தின் மிக முக்கியமான அதிகாரியான சட்டமன்றச் செயலாளர், சட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து சபாநாயகருக்கு முதன்மை ஆலோசகராகப் பணியாற்றுவார். இவர் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு ஆட்சிக் காலங்களிலும் சட்டமன்றச் செயலாளராக பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சட்டமன்ற செயலாளர் பதவியை சீனிவாசன் ராஜினாமா செய்த நிலையில் சாந்தி பொறுப்பேற்றார். தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர் என்ற வரலாற்று சிறப்புமிக்க அங்கீகாரத்தை பெற்றார்.