தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் இன்னும் நடிகராகவே செயல்படுகிறார்; தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் பதவியில் இருப்பவர் அந்த பதவியின் மரியாதையைக் காக்கும் வகையில் நடக்க வேண்டும் என சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் இன்னும் நடிகராகவே செயல்படுகிறார். சட்டசபையை 'சூட்டிங் ஸ்பாட்' போன்று நினைக்கிறார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் தி.மு.க. மீது முதல்-அமைச்சர் விஜய் முன் வைத்த விமர்சனங்களுக்கு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளித்து பேச வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் தி.மு.க. மீது குற்றம் சுமத்துவதையே தனது பணியாக கொண்டுள்ளார்.

இன்னும் தேர்தல் மோடில் இருந்து சி.எம். மோடுக்கு மாறாமல் ஏற்ற இறக்கத்தோடு சினிமாவில் பேசுவதை போல பேசி சட்டமன்றத்தை சூட்டிங் ஸ்பாட்டாகவும், ஸ்டுடியோவாகவும் நினைத்துக் கொண்டுள்ளார். கேமரா முன் வசனம் பேசி பழகியவர் இப்போதும் அதையே செய்கிறார். ஒரு முதல்-அமைச்சர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகளை விட்டுவிட்டு இன்னும் நடிகராகவே செயல்படுகிறார்.

முதல்-அமைச்சர் செய்யும் செயலா?

ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை சொல்வதை போல சட்டமன்றத்திலும் குட்டி கதை சொல்கிறார். அப்பா குறித்து குட்டி கதை சொல்லி இருக்கிறார். உங்க அப்பாவை (எஸ்.ஏ.சந்திரசேகர்) எப்படி நடத்தினீர்கள். அவர் 'என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை. புஸ்சி ஆனந்த் கட்டுப்பாட்டில் உள்ளார் ' என பேட்டி கொடுத்தாரே மறந்துவிட்டதா, எதிர்க்கட்சி தலைவர் சொன்னதை போல செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழநாட்டு மக்களுக்கே தெரியும்.

உங்களுக்கு வாக்களித்தவர்கள் 35 சதவீதம் மட்டுமே, உங்களுக்கு எதிராக வாக்களித்த மக்கள் 65 சதவீதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறுதியாக பேசி முடிக்கையில் ஒரு சைகை செய்தார். அது ஒரு முதல்-அமைச்சர் செய்யும் செயலா?. எங்கள்.தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது என காட்டிய சைகையை கேலி செய்யும் வகையில் ஒரு முதல்-அமைச்சர் நடந்து கொண்டது அருவருப்பானது. முதல்-அமைச்சர் விஜய்க்கும் வி.எஸ்.பாபுவுக்கும ஒரு வேறுபாடும் இல்லை. அவரது சைகை என்பது இந்த சட்டமன்றத்தின் மாண்பு ஒரே அடியாக முடிந்துவிட்டது என்பதை காட்டுவதாகவே உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் பதவியில் இருப்பவர் அந்த பதவியின் மரியாதையைக் காக்கும் வகையில் நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.