செய்திகள்

தஞ்சை –விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்; அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சை–விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு சாலை பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினத்தந்தி

பாபநாசம்,

தஞ்சையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரை தற்போது பயன்பாட்டில் உள்ள சாலை மிகவும் குறுகலானதாகும். இந்த சாலையின் ஓரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பயணிகளும் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். இந்த வழித்தடத்தில் தஞ்சைகும்பகோணம் இடையேயான தொலைவு 50 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொலைவை பஸ்கள் கடந்து செல்வதற்கு 1 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் 2 மணி நேரம் ஆவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சைவிக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் தூரம் நீளம் உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு கடந்த 2010ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. 2015ம் ஆண்டு தஞ்சை விக்கிரவாண்டி இடையே புதிதாக பாலங்கள் அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

4 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பிரிவில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கெடிலம், தென்பெண்ணை உள்பட 26 ஆற்று பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள், 3 ரெயில்வே மேம்பாலங்கள், 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

2வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரையிலான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 34 ஆற்று பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெயங்கொண்டம், கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி உள்ளிட்ட 23 இடங்களில் மேம்பாலங்கள், ஒரு சுங்கச்சாவடி கட்டப்பட்டு வருகின்றன.

3வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 62 இடங்களில் ஆற்று பாலங்கள், தாராசுரத்தில் ரெயில்வே மேம்பாலம், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம், மேல செம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், சூலமங்கலம், பொரக்குடி, வடக்குமாங்குடி, அருண்மொழிப்பேட்டை, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், உதாரமங்கலம், அகரமாங்குடி, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தற்போது 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சாலை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடைந்து அடுத்த ஆண்டு (2020) பயன்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அவ்வாறு சாலை பயன்பாட்டுக்கு வந்தால் தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டிக்கு பயண நேரம் 5 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகவும், தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு 1 மணி நேரத்தில் இருந்து 40 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது