புதுடெல்லி,
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த நீதிபதிகள், முஸ்லிம்களுக்கு என தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டனர்.அரசியல் மற்றும் மத அடிப்படையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்த இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதைப்போல நாட்டின் முக்கியமான முஸ்லிம் மத தலைவர்கள் பலரும் நல்லிணக்கம் பேணுமாறு அழைப்பு விடுத்து உள்ளனர். அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக அவர்கள் ஏமாற்றமும் வெளியிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், இந்த வழக்கில் எங்கள் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த வலுவான ஆதாரங்களை வழங்கினோம். அங்கு பாபர் மசூதியை மீண்டும் கட்டுவதற்காக எங்கள் கடமையை நிறைவேற்ற உண்மையாக முயன்றோம். எனினும் இந்த தீர்ப்பு எங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது. இதை எங்கள் சட்டக்குழு ஆய்வு செய்யும் என்று குறிப்பிட்டு இருந்தது.
இதைப்போல பல்வேறு முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் முஷாவரத்தின் தலைவர் நவாயித் ஹமிது, இந்த தீர்ப்பு குறித்து கூறுகையில், எங்கள் தரப்பு ஆதாரங்கள் அனைத்தும் நிரூபிக்கப்படாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். அதேநேரம் மக்கள் அனைவரும் அமைதியை காக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் இந்த தீர்ப்பை வரவேற்பதாக ஷியா தனிச்சட்ட வாரியம் அறிவித்து உள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்துடன் எப்போதும் துணை நிற்போம் என்றும் ஷியா தனிச்சட்ட வாரிய செய்தி தொடர்பாளர் மவுலானா மிர்சா யசூப் அப்பாஸ் தெரிவித்தார்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பை புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவும் வரவேற்று உள்ளது. இது தொடர்பாக தர்கா நிர்வாகி சத்னுல் அபேதின் அலி கான் கூறுகையில், நீதித்துறைதான் அனைத்திலும் முதன்மையானது. எனவே ஒவ்வொருவரும் இந்த முடிவை மதிக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவையே பார்க்கிறது. எனவே அனைத்து இந்திய குடிமக்களும் ஒருமித்த முகமாக இணைந்து உலகுக்கு நம்மை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான இக்பால் அன்சாரியும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த பிரச்சினையில் நீண்ட காலமாக இருந்த திரை விலகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம். இந்த தீர்ப்பால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்தார்.