பூந்தமல்லி,
சென்னை கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனி, 3-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 26). இவரது மனைவி அருணா (23). கணவன்-மனைவி இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனந்தன் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
அவர் நீண்ட நேரம் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அருணா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டிலும் சோதனை செய்தனர். அப்போது அருணா எழுதி வைத்திருந்த டைரி ஒன்று சிக்கியது.
அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்திருந்ததாகவும், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருணா தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவரது தற் கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருணாவுக்கு திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.