செய்திகள்

மசூத் அசாருக்கு ஐ.நா. தடை : பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்தியாவின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி பேச்சு

மசூத் அசாருக்கு ஐ.நா. தடை விதித்தது பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்தியாவின் தீவிர முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ஐ.நா. சபை ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து தடை விதித்தது. இதனை பா.ஜனதா பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடியும் இதுபற்றி கூறியுள்ளார். பிரதமர் மோடி பேசியதாவது:

மசூத் அசாருக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்தியாவின் தீவிர முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்தியாவின் குரலை உலகம் முழுவதும் கேட்டுள்ளது. இந்தியாவின் கருத்தை நீண்டகாலத்துக்கு புறக்கணிக்க முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று ஐ.நா. அறிவித்ததில் முழு திருப்தி அடைகிறோம். இது வெறும் தொடக்கம் தான். அடுத்து என்ன நடக்கிறது என்பதை காண காத்திருங்கள்.

இந்த காவலாளி கடந்த 5 ஆண்டுகளாக உலகளவில் இந்தியாவின் மரியாதையை அதிகரிக்க தீவிர முயற்சி எடுத்து இருக்கிறார். இதில் எந்த முயற்சியையும் கைவிடவில்லை.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுபற்றி மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறும்போது, இந்தியாவின் நிலை நிரூபணமாகிவிட்டது. மசூத் அசார் இப்போது சர்வதேச பயங்கரவாதி. இந்தியா தற்போது பாதுகாப்பானவர்களிடம் இருக்கிறது. இது பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றார்.

SCROLL FOR NEXT