மதுரை,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அரியூரைச் சேர்ந்தவர், சுந்தர் (வயது 42). லாரி டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு சுனில் (13) விமல் (9) என 2 மகன்கள். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் சுனில் 8-ம் வகுப்பும், விமல் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இந்துமதி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து சுந்தர், தன்னுடய 2 மகன்களையும் கவனித்து வந்தார். மலும் மனைவி இறந்துவிட்டதால் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய 2 மகன்களை கவனிக்க முடியாமலும், சரிவர பணிக்கு செல்ல முடியாமலும் சுந்தர் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் தன்னுடைய மகன்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வது என்னும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சுந்தர், இதற்காக வாழைப்பழங்களை வாங்கி அதில் விஷத்தை வைத்து 2 மகன்களுக்கும் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறுவர்கள் 2 பேரும் சிறிது நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். அதன் பின்னர் தானும் விஷத்தை தின்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் சுந்தரின் வீட்டுக்கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். சத்தம் கொடுத்தும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
எனவே வீட்டுக் கதவை உடைத்து திறந்து பார்த்த போது சுந்தரும், அவருடைய மகன்களும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சோகத்துடன் திரண்டனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் அலங்காநல்லூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 3 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு டிரைவர் சுந்தர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.