வேலூர்,
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (வெள்ளிக்கிழமை)கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லைப்பகுதிகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, ஆற்காடு, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், ஸ்ரீபுரம் பொற்கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டும், மோப்ப நாய் மூலமும் சோதனை செய்யப்பட்டு, அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பணிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.