சென்னை,
கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரிக்கிறது. சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பத்தின் தாக்கம் பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.
பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 3 இடங்களில் இன்று வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் கரூர் பரமத்தியில் 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்), வேலூரில் 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது.