புதுடெல்லி,
இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-
வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவை ஒட்டிய இடங்களில் 20-ந் தேதி முதல் 25-ந் தேதிவரை வெப்ப அலை வீசும். குறிப்பாக, அரியானா, சண்டிகார், டெல்லி, பஞ்சாப், கிழக்கு ராஜஸ்தான், விதர்பா, சத்தீஷ்கார், மேற்கு உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே வெப்ப அலை வீசும்.
மேற்கு வங்காளத்தில் கங்கைக்கரையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் 26-ந் தேதிவரை வெப்பமும், ஈரப்பதமான வானிலையும் நிலவும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 22-ந் தேதிவரை அதிக வெப்பநிலையும், ஈரப்பதமான வானிலையும் நிலவும்.
கேரளம், மாஹே, கடலோர ஆந்திரா, ஏனாம் ஆகிய பகுதிகளில் 24-ந் தேதிவரையும், குஜராத் கடலோர பகுதிகளில் 24 மற்றும் 25-ந் தேதிகளிலும் அதிக வெப்பநிலையும், ஈரப்பதமான வானிலையும் நிலவும். அரியானா, சண்டிகார், மேற்கு உத்தரபிரதேசம். மத்தியபிரதேசம், விதர்பா ஆகிய பகுதிகளில் 20 மற்றும் 21-ந் தேதிகளில் இரவு நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.