புதுடெல்லி,
எல்நினோ தாக்கம் காரணமாக இந்தியாவில் பருவமழை இயல்பைவிட குறையும் என்றும், கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தைவிட 0.5 செல்சியஸ் முதல் சில செல்சியஸ் வரை அதிகமாக வெப்பமடைவதை எல்நினோ என்று சொல்லப்படுகிறது. அதன்படி, தற்போது பசிபிக் பெருங்கடலில் எல்நினோ உருவாகியுள்ளது. வெப்பநிலை 2 செல்சியசுக்கும் அதிகமானால் அதை சூப்பர் எல்நினோ என்று அழைக்கிறோம். அந்த நிலையும் வருகிற செப்டம்பர் மாதம் இறுதியில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளில் வழக்கமான மழைப்பொழிவு குறைந்து, வறட்சி அல்லது பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். தென் அமெரிக்காவில் அதிகப்படியான மேகங்கள் உருவாகி கடுமையான மழையும், வெள்ளமும் ஏற்படும். ஐரோப்பா நாடுகளிலும் சில இடங்களில் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக மொத்தத்தில் உலகளாவிய வானிலையையே தலைகீழாக மாற்றும் சக்தி இந்த எல்நினோவுக்கு உண்டு.
இந்த சூழலில் எல்நினோ தொடர்பாக உலக வானிலை அமைப்பு (டபுள்யூ.எம்.ஓ.) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (யு.என்.) இதற்கான அதிகாரப்பூர்வ எச்சரிக்கையையும், புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளன.
அதில், 'பசிபிக் பெருங்கடலில் எல்நினோ மிகவேகமாகவும், வலுவாகவும் உருவாகி வருகிறது. இது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மிக வலுவான நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எல்நினோவினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய விவசாயம், சுகாதாரம், நீர் மேலாண்மை மற்றும் ஆற்றல் ஆகிய துறைகளுக்குத் தேவையான வானிலை தகவல்களையும், முன்கூட்டிய எச்சரிக்கைகளையும் வழங்க உலக நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து உலக வானிலை அமைப்பு ஒருங்கிணைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது' என கூறப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த எல்நினோ தாக்கத்தால், இந்தியாவில் நடப்பு பருவமழை இயல்பை விடக்குறைவதற்கும், கடுமையான வெப்ப அலைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், "அனைவருக்கும் ஆரம்பகால எச்சரிக்கை" என்ற திட்டத்தின்கீழ், எல்நினோ போன்ற தீவிர இயற்கை நிகழ்வுகளில் இருந்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய விளிம்புநிலை மக்களை பாதுகாக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.