சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 20-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், ஒடிஷா - மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலவீனமான நிலையில் இருக்கும் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 7 நாட்களுக்கு இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.