வானிலை செய்திகள்

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது- இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கனமழை எச்சரிக்கை உள்ளதால் மீனவர்கள் 7-ந் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே மாதம் கடைசி அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். கேரளாவில் தொடங்கும் இந்த மழை இந்த ஆண்டு கடந்த 26-ந் தேதி தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அன்றைய தினம் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. ஆனால் அதற்கு அறிகுறியாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் இன்று மழை பெய்தது. குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

இடியுடன் கூடிய மழை

மாநிலத்தில் வருகிற 7-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், கேரள கடற்கரையோரம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கனமழை எச்சரிக்கை உள்ளதால் மீனவர்கள் 7-ந் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.