வானிலை செய்திகள்

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வாளர் தகவல்

எல்நினோ நிகழ்வு இந்த ஆண்டு பருவமழையை பாதிக்கக்கூடிய காரணியாக இருக்கும்.

சென்னை,

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் 1-ந்தேதி கேரளாவில் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் பருவமழை முன் கூட்டியே அதாவது மே 22 முதல் 24-ந்தேதிக்குள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அக்டோபர் மாதத்தில் பசிபிக் பெருங்கடலில் உருவாகக்கூடிய சூப்பர் எல்நினோ நிகழ்வு இந்த ஆண்டு பருவமழையை பாதிக்கக்கூடிய காரணியாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே பருவமழை தொடங்கினாலும், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலங்களில் பதிவாகும் இயல்பான மழை அளவை விட இந்த ஆண்டு குறைவாகவே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், எல்நினோ நிகழ்வால், தமிழ்நாட்டின் கோடை காலம் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.