வானிலை செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

நவம்பர் மாத சராசரி மழை அளவு மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.

சென்னை,

கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம்அறிவித்து இருந்தது .

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.48 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT