சென்னை,
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் காரணமாக கடுமையாக வாட்டி வந்த வெயிலின் தாக்கம் குறைந்தது.
இந்த நிலையில், அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 17-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியும், 24-ம் தேதி வாக்கில் தெற்கு அரபிக் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று முதல் 19-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.