பூந்தமல்லி,
திருவேற்காடு, செல்லியம்மன் நகர், 9-வது தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (26). இவர்களுக்கு தர்சன்(5) என்ற மகனும், தியா(3) என்ற மகளும் உள்ளனர். இதில் தர்சன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று காலை கீதா தனது மொபட்டில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நெற்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், பள்ளிக்குப்பம் அருகே சென்றபோது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் சாலையோரம் உள்ள மண் ரோட்டில் சென்றார்.
அப்போது மண் சறுக்கியதில் மொபட்டில் இருந்து தவறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் தர்சன் மட்டும் சாலையில் விழுந்ததால் பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுவன் தர்சனின் தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை கண்டதும் கீதா கதறி அழுதார்.
இந்த விபத்தில் கீதாவும், அவரது மகள் தியாவும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தண்ணீர் லாரி டிரைவர் ஜெய்சிங்(36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்திற்கு காரணம் சாலையோரம் தேங்கி உள்ள மணல் பரப்பை அகற்றாததும், சாலையை சீரமைக்காததும் தான் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.