துபாய்,
கொரோனா பரவலின் 2வது அலையை தடுக்க துபாய் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துபாய் சுகாதார ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் அவரை கடைசியாக சந்தித்த நாளில் இருந்து கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் அந்த நபருக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லை என்றாலும் தனிமைப்படுத்துதலை தொடர வேண்டும்.
இந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் உள்ளதா? அல்லது அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதை தாங்களாகவே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற அறிகுறிகள் தனிமைப்படுத்தும் காலத்தில் தெரிய வந்தால் மீண்டும் அந்த நபர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
மேலும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லாவிட்டாலும், கொரோனா தொற்று உடையவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள், அவர்களுடன் வசித்தவர்கள் ஆகியோர் கட்டாயம் தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.