உகான்,
சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. சுமார் 100 நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் நாள்தோறும் புதிய நோயாளிகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி வருகிறது.
இந்த வைரசின் பிறப்பிடமான சீனாவில் , 3,097 இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். அங்கு வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,695 ஆனது. உலகம் முழுவதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் வைரசின் வெளிப்பட்ட இடமான ஹூபேய் நகரத்தைச்சேர்ந்த 100-வயது முதியவர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி கொரோனா வைரஸ் அறிகுறியால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
13 நாட்கள் அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் விளைவாக அவர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு உடல் நலம் தேறினார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட அதிக வயதுடைய நபராக இந்த 100- வயது முதியவர் அறியப்படுகிறார்.